வடமாகாணத்தில் நவம்பர் மாதம் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4 பேரும், முல்லைத்தீவில் 2 பேருமாக மொத்தமாக 27 பேர் கடந்த மாதம், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் நவம்பர் மாதம் 7682 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என்றும் இதில் கிடைக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.