புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைச் செய்வதில் தமிழ்த் தரப்புக்குள் பல்வேறு இழுபறிகள் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பங்கேற்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த முன்மொழிவானது எதிர்வரும் 19ஆம் திகதி கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பங்கேற்புடன் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தக் கலந்துரையாடலுக்கான சந்திப்பு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகள் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைச் செய்வதற்கு ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்தக்குழுவானது தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம், வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டம், மற்றும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி உருவாக்கிவரும் முன்மொழிவு ஆகியவற்றை உள்ளீர்த்து அதிலிருந்து மேம்பட்டதான இறுதி முன்மொழிவு வரைவொன்றை தயாரிப்பதையே இலக்காக கொண்டுள்ளது.
இருந்தபோதும், இந்தச் செயற்பாடு தற்போது வரையில் ஆரம்பத்த இடத்திலேயே உள்ளது. காரணம், மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளினதும் இணக்கத்துடனான வரைபொன்றையே சமர்ப்பதற்கு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறிப்பாக கூட்டமைப்பின் முன்மொழிவுகளை ஏனைய தரப்புக்களை ஏற்கச் செய்தல், ஏனைய தரப்புக்களின் யோசனைகளை கூட்டமைப்பின் முன்மொழிவில் உள்ளீர்த்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றார்.
இந்தவிடயம் சம்பந்தமாக உறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காக கடந்த 11ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தினை கூட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்.
எனினும், அது சாத்தியமாகாத நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் தனக்கு கால அவகாசத்தினை வழங்குமாறு ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளிடத்தில் கோரியுள்ளார்.
எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் பீடத்தினை கூட்டுவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.