ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை அமெரிக்க தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வௌ்ளை மாளிகைக்கு செல்வதற்கான இறுதிப் படிமுறையிலும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களை பெற்று வெற்றி கொண்டார்.
குடியரசுக்கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களை பெற்றார்.
அமெரிக்க தேர்தல் முறைமையின்படி, நியமிக்கப்பட்ட தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களுக்கே வாக்காளர்கள் தமது வாக்குகளை வழங்குவர்.
தெரிவு செய்யப்படும் தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளருக்கான தமது வாக்கினை தேர்தல் நிறைவடைந்த சில வாரங்களில் வழங்குவார்கள்.
இவ்வாறான நடைமுறைகள் காணப்படுகின்ற போதிலும், தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.