480மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கும் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தானத் திட்டத்தினுள் சிறிலங்காவை தொடர்ந்தும் வைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை தினம் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை நேற்று வொஷிங்டனில் கூடியிருந்தது.
இதன்போது மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத் திட்டத்தினுள் சிறிலங்காவை தொடர்ந்தும் உள்வாங்கி வைத்திருப்பதா இல்லையான என்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அதுதொடர்பான உத்தியோக பூர்வமான முடிவு கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர் சபையினால் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபையானது, சிறிலங்காவை தமது மானியத்திட்டத்தினுள் உள்வாங்குவதற்குரிய தகுதிகளைக் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொண்டு தெரிவு செய்திருந்தது.
ஆதன்பின்னர் 2017 செப்டம்பர் 20இல் சிறிலங்கா அரசாங்கம் தனது பக்க முழுமையான ஆய்வினை நிறைசெய்திருந்ததோடு அதேயாண்டு டிசம்பர் 19இல் இலங்கை தொடர்ந்தும் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.சி.சி. சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தது.
அதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி ஐந்து வருடங்களுக்கு சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 480மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதென மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தது.
எனினும் உள்நாட்டில் கடும்போக்கு தேசியவாதிகளால் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.