திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
திருமலை நகரில் முருகாபுரி, ஜின்னானகர், அபயபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும்வரை, குறித்த பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் அதிகாரங்களின் அடிப்படையில் அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 6 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதால், அவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.