கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாக பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சி தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிக பிழையானது. என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
அத்துடன் அவருடைய கடிதம் மின்னஞ்சலில் கிடைத்துள்ளதாக கூறிய சேனாதிராஜா அதற்கான பதில் நாளையதினம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்றின் சதி முயற்சியின் மூலம் யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், அதை அவரது தரப்பினர் பகிரங்கப்படுத்தியும் உள்ளனர்.
அதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா நாமும் பேசுவதெனில் பலதை பேசலாம். ஆனால், நாம் பொறுப்பான அரசியல்வாதிகள். அதனால் கட்சிக்குள் கடிதம் பற்றி ஆலோசித்து, பதிலளிக்கத்தக்க விடயம் என்றால் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.