நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.
இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தி.மு.க.வில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கைப் பண்புகள் பாழடைந்து விட்டன.
மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றது தான் குற்றம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.