யாழ்ப்பாண மாநகர சபையில் ஒன்றுமையாக ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை தேவை என்று கோருவது வேடிக்கையாக உள்ளது என, சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர், றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“புதிய அரசமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோரி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மாகாண சபை முறைமையிலான அதிகாரப் பகிர்வையும் வேண்டி நிற்கின்றனர்.
இவை இரண்டும் அறவே வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு.
வடக்கில் ஒரேயொரு மாநகர சபையான, யாழ்ப்பாணம் மாநகர சபையைக் கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமக்குள் முட்டிமோதி அதை இழந்துள்ளது.
ஒரு மாநகர சபையில் கூட ஒற்றுமையாக ஆட்சி நடத்தக் கூடிய பக்குவம் கூட்டமைப்பினரிடம் இல்லை. வடக்கு மாகாண சபையையும், அவர்களே சீரழித்தனர்.
‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ என்ற கொள்கையுடன் ஜனாதிபதி செயற்படுகின்றார் எனில், புதிய அரசமைப்பில் மாகாண சபை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில்தான் இருக்க வேண்டும். அதை ஒன்பது மாகாணங்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் மத்தியில் ஆட்சி எதற்கு?” என்றும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.