அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார்.
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர்.
ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை மதுரைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.