ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மையில்லை அப்பட்டமான பொய் என யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பில் அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில், ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன்.
சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன.
சுமந்திரன் எனது பார்வைக்காக எனக்கு அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.
எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.