உறவுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் வேதனை என்னவென்று அனுபவபட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பி.கருணாவதி தெரிவித்தள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது “காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமான அரசிடம் இருந்து எமக்கு நீதி கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்துள்ள நிலையில், நாம் ஐ.நா. மனித உரிமை பேரவை, ஐ.நா பாதுகாப்பு சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இருந்தே நீதியை எதிர்பார்த்து நிற்கிறோம்.
கடந்த 16.12.2019 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன், குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் என்றும் அவர்களை திருப்பி கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கூற்றுக்கு ஜெனீவாவில் நின்று எமக்காக குரல் கொடுக்கிறேன் என்று மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் என்ன பதிலடி கொடுத்தீர்கள்?
எனவே எமது விடயத்தில் எம்மை கலந்தாலோசித்து எடுக்கும் முடிவுகளுக்கு மாத்திரமே நாம் ஆதரவு வழங்குவோம். இதுவரை எம்மை ஏமாற்றியவர்களை இனியும் நாம் நம்ப போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்