இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கும் நினைவுத்தூபியை அழிப்பதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அதற்கான ஆதராங்களை அழித்து வருவதாக ஸ்கார்போர்க் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட அன்புக்குரியவர்களை நினைவேந்தும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அமைத்திருந்த இந்த தூபியை இடித்தழித்துள்ளமை கண்டனத்துக்குரிய என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் இவ்விதமான நினைவேந்தல் அடையாளங்களை அழிப்பதன் மூலம் தான் இழைத்த தவறுகளுக்கான ஆதரங்களை மறைக்கப்பார்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் நினைவுச்சின்னங்கள், கல்லறைகள் அழிக்கப்படுகின்றமையானது அந்த தரப்பினரை முற்றாக புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகவும் கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விதமான செயற்பாடுகள்1981ஆம் ஆண்டு யாழ்.நூலகத்தினை இடித்து அழித்து கலவரத்தினை ஏற்படுத்திய இருண்ட யுகங்களை மீண்டும் நினைவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், ஒன்ராரியோ சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் மேலும் வலுவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.