மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணையில் செல்வதற்கு அனுமதி தருமாறு கோரி, அரசியல் கைதியொருவர் 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள 64 வயதுடைய கனகசபை தேவதாசன் என்ற அரசியல் கைதியே, கடந்த 06ஆம் நாள் தொடக்கம், நீராகாரம் மட்டும் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தனது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனது உறவுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அவர உறவுகள் குரலற்றவரின் குரல் அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட மொழியுரிமை மற்றும் அடிப்படை உரிமையை தனது விடயத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அப்பட்டமாக மீறுகிறது என்றும் கூறியுள்ள அரசியல் கைதி தேவதாசன், இது தொடர்பான மன்றுக்கு பல கடிதங்களும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியும் பலனளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்படுவது அநீதி என்றும், தனக்கு எவரதும் அனுதாபமோ வாக்குறுதியோ வேண்டாம் நீதி மட்டுமே வேண்டும் என்றும் அவர் தனது உறவுகளிடம் தெரிவித்துள்ளார்.