கிளிநொச்சி – சாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில், காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்காக, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இருந்து சென்ற அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.
கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகளால் சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன.
அதனை தொடர்ந்து இன்று காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள செயலக அதிகாரிகள் சாந்தபுரம் பொது நோக்கு மண்டபத்திற்கு மக்களை அழைத்திருந்தனர் .
இதன்போதே, முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கும் முடிவுக்கு, மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
கிராமம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கல்வி, சுகாதாரம் மற்றும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பிரதேச சபை என அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்துடன் இருந்து வருவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காணி அனுமதி பத்திரம் கூட, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காணிகளை முல்லைத்தீவு- ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்குள் கொண்டு செல்வது பொருத்தமற்றது எனவும் மக்கள் கூறியுள்ளனர்.