இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இந்த பொங்கல் நிகழ்வு, இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனத்தின் ஊடாக விவசாய செய்கை ஆரம்பித்து இன்றுடன் 101 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று குறித்த பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருடம் தோறும் விவசாய சம்மேளனத்தினால் குறித்த பொங்கல் நிகழ்வு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வருகின்றது.
பிரதான பொங்கல் வைக்கப்பட்டதை தொடர்ந்து இரணைமடு விவசாய சம்மேளனத்தில் அங்கத்தவர்களாக உள்ள விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாய குடும்பங்கள் பொங்கலிட்டனர்.
பொங்கல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் த.ராஜகோபு, இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.