மட்டக்களப்பு – கெவுளியாமடு பகுதியிலுள்ள மேய்ச்சல் தரை காணிகளை, முந்திரிகை செய்கைக்காக ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்துமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கெவுளியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பகுதிகள் நீண்டகாலமாக கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரையாக இருந்து வருகின்றன.
படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது, இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளில், மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
தற்போது மேற்படி பகுதியில் ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி, காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதால் அப்பகுதி கால்நடை வளர்ப்போர், கால்நடைகளை வளர்ப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று அங்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்படாத நிலையிலேயே முந்திரிகை செய்கை ஊர்காவல் படையினரால் முன்னெடுக்கப்படுவதாகவும், வன இலாகாவின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.