யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ். தொடருந்து நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் சேவையை ஆரம்பிக்கவுள்ளன. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்குப் புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி தொடருந்து சேவை ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்குப் புறப்படும் யாழ் தேவி தொடருந்து சேவையும் ஆரம்பிக்கப்படுகின்றது.
அவ்வாறே, கல்கிசையில் இருந்து 5.55 மணிக்கும், கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ் தேவி தொடருந்து சேவையும் , 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி தொடருந்து சேவையும் எதிர்வரும் 18ஆம் திகதி சேவையை ஆரம்பிக்கின்றது.
ஏனைய, தொடருந்து சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.