பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அறிவாலயத்தில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில்,
“30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், றொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் – ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ளாமல், தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடத்தி வருவதற்கு, மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் மிகுந்த வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆளுநரின் இந்த காலதாமதம் அசாதாரணமானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக ஆளுநரை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.