கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 3 இலட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவில் இருந்து 6 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இந்த வாரம் வரும் என்றும் இதனை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மறுநாளே ஆரம்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டாம் கட்டம் முதல் கட்டத்திலிருந்து மூன்று வாரங்களின் பின்னர் இடம்பெறும் எனவும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
கோவாக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு இலவசமாக கிடைக்கும் என்றும் மிகுதி தடுப்பூசிகள் அரசாங்கத்தின் செலவில் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.