இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் அத்துமீறல் நடிக்கைக்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சினையை எழுப்பினர்.
தமிழக மீனவர்கள் 4 பேரை சிறிலங்கா கடற்படை கொன்றுவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்தே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.