வடமேற்கு நைஜீரியாவில் உள்ள சம்பாரா (Zamfara) மாகாணத்தில், பாடசாலை ஒன்றில் இருந்து 300இற்கு மேற்பட்ட மாணவிகளை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஜங்கெபே (Jangebe) நகரில் உள்ள அரசாங்க பெண்கள் நடுத்தர பாடசாலைக்குள் இன்று அதிகாலை 1 மணியளவில் நுழைந்த ஆயுதபாணிகள், அங்கிருந்த மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கு 421 மாணவிகள் இருந்தனர் என்றும், அவர்களில் 55 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுதக் குழுவினர் சிலர் அரசாங்க படைகளின் சீருடையில் இருந்துள்ளனர் என்று கூறப்படுகின்ற போதும், கடத்திச் சென்ற நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட 317 மாணவிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அரசுப் படைகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.