தாயகத்திலும் புலத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் உண்ணாநோன்பு போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து கனடிய மண்ணில் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் மாணவர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டம் மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் சந்திப்பின் JOHN DANIELS PARK இல் ஆரம்பமாகியது.
கடும் குளிருக்கு மத்தியில் இன்று ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப்போராட்டத்தில் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக நால்வர் பங்கேற்றிருந்தனர்.
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில், சர்வதேசத்திடம் அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டியும்; ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்று கொள்ள வேண்டியும்; ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டியும்; இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒன்ராரியோ கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் ஒன்றுபட்ட தமிழர்களாக ஓரணியில் நிற்போம் என்று வலியுறுத்தப்பட்டது.





