ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்தியா ருடே தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“சிறிலங்காவுக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்துக் கொள்வது, இந்தியாவுடனான உறவுகளைப் பாதிக்காது.
ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தலைவர், அயலவர்களுக்கு முதலிடம் குறித்துப் பேசுகிறார், நாங்கள் உடனடி அயலவர்களாக இருக்கிறோம் என்றும், அட்மிரல் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.
“எப்போதும், சிறிலங்கா விவகாரம் பேசப்படும், தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடக்கப் போவதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.
இந்தியா மிகச் சிறந்த நண்பன், சிறிலங்காவுடன் இந்தியா இணைந்து நிற்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறிலங்கா பயணத்தை, நாங்கள் பயன்படுத்தவில்லை.
இந்தியாவின் கவலைகள் மற்றும் கரிசனைகளை நாங்கள் அறிந்திருந்தோம். பாகிஸ்தானுடன் பாதுகாப்பு அல்லது கடல்சார் ஒத்துழைப்பு எதுவும் இருக்காது .” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





