மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே தி.மு.க. தான். ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை கொடுப்பான். ஜெயலலிதா யாரால் இறந்தார்? என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான அவதூறான பிரசாரத்தை நாட்டில் பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை கண்டிப்பாக தண்டிக்கும். ஜெயலலிதா நன்மதிப்புடன் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி கொண்டிருந்தார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து நீதிமன்றமே அவரை நிரபராதி என்று கூறியது. ஆனாலும் அவர் வெளியே வந்தபிறகு அவர் மீது வீண்பழி சுமத்தி மேல்முறையீட்டு வழக்கு போட்டு அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினர் எனத் தெரிவித்துள்ளார்.