அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஒருபோதும் தாங்கள் சந்திக்கப் போவதில்லை என்று, வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி, தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி,
தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே, எங்களின் உறவுகளில் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்திலும், காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு அரசாங்கத்தினாலோ, அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈபிடிபியும் காரணம் எனத் தெரிவித்த தாய்மார்களை நீதிமன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் முன்னர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவரை எப்படி சந்திக்க முடியும்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது.
அந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகவுள்ள டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதில் பயனில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.