உலகின் செல்வந்த நாடுகள் பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக் கொண்டதால், ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் (greta Thunberg) குற்றம்சாட்டியுள்ளார்.
உலகளவில் பருவநிலை மாற்றம் தொடர்பான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்த, கிரெட்டா தன்பெர்க், தனது அறக்கட்டளையிலிருந்து ஒரு இலட்சம் யூரோவை உலக சுகாதார நிறுவன அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிதி ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“செல்வந்த நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிடையே நிலவும் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள், தடுப்பூசி உருவாக்குபவர்கள் மற்றும் உலக மக்கள் முன்வரவேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், முதியவர்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளோருக்கு தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் நிலையில், செல்வந்த நாடுகள் இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருவது முற்றிலும் தவறானது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 4 பேரில் ஒருவர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500-ல் ஒருவர் மட்டுமே தடுப்பூசியை பெற்றுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.