கொரோனா வைரசினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உலகின் வறிய மக்கள் மீள்வதற்கு ஆகக்குறைந்தது பத்துவருடங்களாவது ஆகும் என ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
அரசாங்கங்கள் துரிதமாக செயற்படவேண்டும் என்பதோடு சமத்துவமின்மையை குறைப்பதற்கு உறுதியான தெளிவான காலவரையறைகளை வகுக்கவேண்டும் எனவும் ஒக்ஸ்பாம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி கொரோனா வைரசினை போல கொடியது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என ஒக்ஸ்பாம் நிறைவேற்றதிகாரி கபிரியலா பச்சர் (Gabriela Butcher) தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்பு மற்றும் மீள்எழுச்சி நடவடிக்கைகளின் மையமாக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
79 நாடுகளை சேர்ந்த 295 பொருளியலாளர்கள் மத்தியில் ஒக்ஸ்பாம் மேற்கொண்ட ஆய்வின் போது 87 சதவீதமானவர்கள் தங்கள் நாடுகளில் சமத்துவமின்மை அதிகரிக்க போகின்றது என தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.