தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதேவேளை, தொகுதிகள் எவையென்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதாகவும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் ஆறு இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அத்துடன், அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சற்று அதிகமான தொகுதிகளை எதிர்பார்த்திருந்தது. ஆனால், தி.மு.க. தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று தொகுதிப்பிரச்சினை இறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிவுசெய்யப்பட்டுள்ளது.