தீவிரவாதத்தை வேரறுக்கவும், பிராந்திய ஒற்றுமைக்காகவும் “பிம்ஸ்டெக்” கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாள் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் “பிம்ஸ்டெக்” ஒத்துழைப்பு மாநாடு நேபாளத் தலைநகர் காத் மாண்டுவில் நேற்றுத் தொடங்கியது.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையேயான உறவானது, வெறும் தூதரக ரீதியிலானது மட்டுமல்ல என்றும், அதற்கு மாறாக, நாகரீகம், வரலாறு, கலை, மொழி, கலாச் சாரம் ஆகிய அம்சங்களுடன் கூடிய உணர்வுப்பூர்வமான உறவாக விளங்குகிறது எனவும் விபரித்துள்ளார்.
தற்போது, உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிர வாதம் விளங்கி வருவதாகவும், குறித்த இந்த நாடுகள் அமைந்திருக்கும் பிராந்தியங்களிலும் தீவிரவாதம் வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
மனிதக் குலத்துக்கு மிகவும் ஆபத்தான இந்தத் தீவிரவாதத்தை இந்த நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.