பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2 ஆண்டு கால அவகாசம் கொடுப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக அமர்வின் போது பொறுப்புக்கூறல் விடயத்திற்காக இலங்கை அரசாங்கம் இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை கேட்கப் போவதாக கூறப்படுகின்றமை குறித்தும், 2 ஆண்டு கால அவகாசம் கொடுத்தால் ஐ.நாவின் கண்காணிப்புடன் கொடுக்கப்பட வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், அப்படியானால் இதுவரையில் ஐ.நாவின் கண்காணிப்பு இருக்கவில்லையா என்றும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசாங்கத்திற்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்கினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அனைத்துலக சமூகம் மறந்துவிடும் எனவும், இதுவரை அரசாங்கத்திற்கு ஒரு ஆண்டுகாலம் வழங்கப்பட்ட நிலையில், அந்த கால கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிட்ட அளவுதான் செய்ய முடிந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் சில காலங்களை கொடுப்பதில் பிழை இருக்க முடியாது என்பதுடன், கால அவகாசம் கொடுப்பது நன்மை தான் என்ற போதிலும், காலத்தினை கொடுக்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகள் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்த்து கால அவகாசத்தினை வழங்க முடியுமென்றும் கூறியுள்ளார்.
ஐ.நாவிற்கு வாராந்தம் மற்றும் மாதாந்தம் என்ன செய்கின்றார்கள் என்பதனை அறிய கூடியவாறு ஏதாவது ஒரு செயற்திட்டத்தினை வகுக்குமாறு கூறமுடியும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதேவேளை ஐ.நாவின் நேரடிக் கண்காணிப்பு இதுவரையில் இருக்கவில்லை எனவும், கால அவகாசத்தினைக் கொடுத்து அதற்குள் முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றே அவர்கள் கூறியிருந்தார்கள் என்பதையும் முதலமைச்சர் விபரித்துள்ளார்.
இதுவரையில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு எந்தளவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பிலும், அந்த செயற்பாடுகள் மக்களுக்கு நன்மை அளித்துள்ளனவா என்பது குறித்தும் ஐ.நா ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும், இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், குறுகிய கால அவகாசமும், அதிகளவான மேற்பார்வையும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.