இலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஆயுதப் போர் முடிவுக்கு வந்தமையின் பத்தாம் ஆண்டை நினைவுகூரும் வேளையில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்லவெனக் கனடா சார்பில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதில் முன்னேற்றம் ஏற்படாதமையும், இலங்கை அரசு முரண்படும் கருத்துக்களை வெளியிட்டு வருவதும் பாதிக்கப்பட்டோருக்கு விரக்தி ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
சர்வதேச விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்கள், நீதிபதிகள் ஆகியோரைக் கொண்ட நீதிப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு கனடா கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை வெளியிடுமாறு இலங்கை அரசைக் கனடா வலியுறுத்திக் கொள்வதாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் பொறுப்புக் கூறல், கலப்பு நீதிப்பொறிமுறையை அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கடப்பாடுகளுக்கு உதவி வழங்கக் கனடா தயாராக உள்ளது என்றும் கரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.