ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும், சிரியாவின் டோமா பகுதியில் ஆய்வுசெய்ய சர்வதேச குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரஷ்யா கூறியுள்ளது.
சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் டோமாவில் ஆய்வுச் செய்ய சர்வதேசக் குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று ரசாயன ஆய்வாளர்கள் டோமாவில் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ரஷ்யாவும், சிரியாவும் கூறி வந்த நிலையில் ரசாயன ஆயுத ஆய்வாளர்களை ஆய்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.