ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி மற்றும் கட்சித்தலைமைப் பதவியில் இருந்து விலகுமாறு தற்போதைய நிலையில் கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சந்தித்த படுதோல்வியை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டமையும், நண்பர்களுக்கு அரசாங்கத்தில் பல பதவிகளை பெற்றுக்கொடுத்தமை ஆகிய நடவடிக்கைகளினாலேயே ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், எனவே அவர் கட்சித்தலைமையில் இருந்து விலகி கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் பிரதமர் கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் மட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்கும் எனவும் கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக சனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.