சீன அரசுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரி ஜெரி சுன் சிங் லீக்கு (55) நேற்று அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியை சேர்ந்தவர் ஜெரி சுன் சிங் லீ. அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏவில் பணியாற்றி வந்த ஜெரி சுன் சிங் லீ, கடந்த 2007ம் ஆண்டு தன் பணியை ராஜினாமா செய்தார். அதன் பின் அவர் ஹாங்காங்கில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு இரண்டு சீன புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஜெரி சுன் சிங் லீயை அணுகி அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு பதிலாக ஜெரி சுன் சிங் லீக்கு ஒரு லட்சம் டாலர் ரொக்கமும் அவர் ஆயுள் முழுவதும் வசதியாக வாழ்வதற்கு தேவையானவற்றையும் வழங்குவதாக சீன அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்ட ஜெரி சுன் சிங் லீ தன் லாப்டாப்பில் ஆவணம் ஒன்றை உருவாக்கி அதில் சீனாவில் எங்கெல்லாம் சிஐஏ அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள், எங்கெல்லாம் சிஐஏ செயல்பாடுகள் நடைபெறுகின்றன போன்ற தகவல்களை பதிவு செய்தார். பின்னர் அந்த தகவலை ஒரு தம்ப் டிரைவில் ஏற்றினார்.
இதற்கிடையில் 2010 முதல் 2013ம் ஆண்டு வரை பல முறை தன் வங்கி கணக்கில் லட்சக்கணக்கான டாலர் பணத்தை ஜெரி சுன் சிங் லீ டெபாசிட் செய்துள்ளார்.
ஜெரி சுன் சிங் லீயின் நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ (FBI) அவரை கண்காணிக்க துவங்கியது. அதே ஆண்டு அவர் மீண்டும் சிஐஏவில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா வந்த ஜெரி சுன் சிங் லீயின் பெட்டிகளை எஃப்.பி.ஐ அதிகாரிகள் பரிசோதித்த போது அவர் வைத்திருந்த தம்ப் டிரைவ் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தேச பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஜெரி சுன் சிங் லீ கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜெரி சுன் சிங் லீ மீதான வழக்கு விசாரணை முடிவில் நேற்று அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஓராண்டில் சிறை தண்டனை பெறும் மூன்றாவது அமெரிக்க முன்னாள் புலனாய்வு அதிகாரி ஜெரி சுன் சிங் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ஜான் சி. டெமெர்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் :
முன்னாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள சிறை தண்டனை மற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தற்போது பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சீன அரசு உங்களை குறிவைத்தால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்காவுக்கு துரோகம் செய்தால் உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்பதை நீதித்துறை உறுதி செய்யும் என்று ஜான் சி. டெமெர்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.