அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிபர் டிரம்பின் ஊடகங்கள் மீதான விமர்சனங்களால் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை ஆபத்து அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்களின் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் விமர்சனங்கள் மூலோபாய திட்டம் கொண்டவை என்று கூறியுள்ள மனித உரிமைகளுக்கான இடை-அமெரிக்க ஆணையத்தின் டேவிட் காயே எடிசன் லான்ஸா, இவை பத்திரிகை சுதந்திரத்தையும், சரிபார்க்கத்தக்க உண்மைகளையும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தெரிவித்த விமர்சனங்கள் தன்னுடையதல்ல என டிரம்பின் மகள் இவான்கா ஒதுங்கி கொண்ட சில மணிநேரங்களுக்கு பின், இந்த கூற்று வந்துள்ளது.
ஆனால், “ஊடகங்கள் எதிரிகளல்ல” என்று கூற வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் வியாழக்கிழமை மறுத்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்து சிஎன்என் செய்தியாளர் வெளியேறினார்.
“பத்திரிகையாளர்கள் மக்களின் எதிரிகள்” என்று டிரம்ப் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை காலையில் “போலிச் செய்திகள் உண்மையான அச்சுறுத்தல்” என்று தமது கீச்சகப் பதிவில் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதிபராவதற்கு முன்னரும், அதிபராக இருக்கும் இப்போதும், டிரம்ப் ஊடகங்களை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அவர் மீது குறை கூறப்படுகின்றது.