தமிழக அமைச்சரவையின் மனிதாபிமானத் தீர்மானத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதுடன், பல ஆண்டுகளாக முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்த இந்த வழக்கிற்கு ஒரு முடிவைக் கொண்டு வரும் முகமாக மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளதனை மக்களவை சுட்டிக்காட்டியுள்து.
மேல் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 161வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று அறியப்படுகின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் தலைமையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானமானது மத்திய அரசால் மறுக்கப்பட்டு மேல் நீதிமன்றில் முறையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை கடந்த ஒன்பதாம் நாள் அன்று நிறைவேற்றி ஆளுனரிடம் பரிந்துரை செய்துள்ளதை மனிதாபமானச் சிந்தனையுடன் வரவேற்பதாகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.