திருகோணமலை – தோப்பூர், கல்லம்பத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக், சிறில்ஙகா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்த போது, தோப்பூர், கல்லம்பத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் குறித்த இராணுவ முகாமை மிக விரைவில் அகற்றுவதற்கு இராணுவத் தளபதி சம்மதம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெளபீக் தெரிவித்துள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் அவர்களுடைய இராணுவ முகாமை அமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்ததாக தெளபீக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கல்லம்பத்தை கிராமம் விரைவில் அம்மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.