ரொறன்ரோவின் வடக்கே நோர்த் யோர்க் பகுதியிலுள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டடத்தின் எட்டாவது மாடியிலேயே தீ பரவியுள்ளது. தீ விபத்தில் பெண்ணொருவர் சிக்கிக் கொண்ட நிலையில், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டுள்ளனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அவசர முதலுதவிகள் செய்யப்பட்ட போதிலும், பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரொறன்ரோ சமுதாய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறித்த கட்டடத்தில் மிக நீண்டகாலமாக வசித்துவந்த 60 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த அனர்த்தத்தில் மற்றுமொரு நபர் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கவனக்குறைவினாலேயே குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரொறன்ரோ தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ரொறன்ரோ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.