பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை தனது கட்சி ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்த அவர், அதனை ஒட்டி நாட்டுமக்களுக்கு நேரலையாக உரையாற்றியுள்ளார்.
இதன்போது கடந்த 22 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் தனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசும்போது, சீனாவுடன் தனது அரசு மிக நெருக்கமாக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் மேம்பாட்டுக்கு சீனா பல வகைகளில் தொடர்ந்து உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வறுமை ஒழிப்பு தொடர்பாகவும், ஊழல் ஒழிப்பு தொடர்பாகவும் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகங்கள், தன்னை ஒரு “பாலிவுட்” சினிமா வில்லன் போல சித்தரிப்பதாகவும், ஆனால், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் இந்தப் பிரச்சனைக்கு இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியாவும், பலூசிஸ்தான் வன்முறைக்குக் காரணம் இந்தியா என்று பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்வு காண்பதற்கான முயற்சிகளில், இந்தியா ஓர் அடி எடுத்து வைத்தால் தாங்கள் இரண்டு அடி எடுத்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்து்ளளார்.
ஆப்கானிஸ்தானுடன் திறந்த எல்லையைப் பேண வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.
அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேண விரும்புவதாகக் கூறிய அவர், அமெரிக்காவிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதைவிட, அண்டை நாடுகளுடன் உறவை பலப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.