பொறுப்புக் கூறல் விடயத்தில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கு மாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.ந.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா மற்றும் சர்வதேசத்தின் நேரடிக் கண்காணிப்புடன் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துமாறு ம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன் ஆகியோரே கூட்டாக இவ்வாறு வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சிறிலங்கா மீதான புதிய பிரேரணையைக் கொண்டு வரும் இணை அனுசரணை நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகள் சில அதற்கு ஆதரவளிக்கவுள்ளன.
இந்நிலையில் சிறிலங்கா தொடர்பான தற்போதைய நிலைமைகளை மதிப்பிட வேண்டியதன் அவசியம் மற்றும் புதிய பிரேரணையில் உள்வாங்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.