மன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும் மனுக்களை தாக்கல் செய்ததாக மன்னாரில் உள்ள காவல்நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஊடக வட்டாரங்களது தகவல்களின் படி, பௌத்த அமைப்புக்களது கோபத்தையடுத்தே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிங்கள சுற்றலாவாசிகள் தமது சுற்றுப்பயணத்தின் போது மன்னார் புதைகுழியை பார்வையிட்டு வருவதுடன், சமூக ஊடகங்களிலும் அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்ததையடுத்தே தடை அனுமதி பெறப்பட்டுள்ளது.
இனப்படுகொலையின் பங்காளிகளாக உள்ள காவல்துறை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக ஊடகவியலாளர்களை புதைகுழி பகுதியில் படமாக்குதல் அல்லது ஒளிப்பதிவு செய்தல் ஆகியவற்றை தடைசெய்ய கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
இதனையடுத்து மன்னார் நீதவான் பிரபாகரன் அந்த இடத்திலுள்ள அகழ்வாராய்வின் அதிகாரியிடம் இருந்து அனுமதியில்லாமல் தளத்தை அணுகுவதற்கு தடை விதித்துள்ளார்.
இதேவேளை இது ஊடக சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என்று மன்னார் ஊடகவியலாளர்கள் குறைகூறியுள்ளனர்.
அத்துடன் இந்த விடயத்தில் சட்டபூர்வமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதன் அடிப்படையில் மன்னார் சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.