உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சிறிலங்காவின் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றைத் தான் ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதிலும், அது இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சில விடயங்கள் தொடர்பாக உண்மைத் தன்மையைத் தாம் அறிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், இதற்காகக் காத்திருக்க முடியாது எனவும், கூறினார்
விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதிகளைத் தமக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.