சிரியாவின் அலெப்போ நகரின் மீது சிரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானங்கள் நேற்றிரவு நடாத்திய தாக்குதலில் சுமார் 50அப்பாவி பொதுமக்களில் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது போன்ற ஒரு கொடூரமான தாக்குதலை அலெப்போ பகுதி மக்கள் இதுவரை சந்தித்தது இல்லை என்றும் சிரியா ஊடகங்களுக்கு பேட்டியளித்த உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து, கடந்த மூன்று நாட்களாக அரசுப்படைகள் நடாத்திவரும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அலெப்போவில் உள்ள மருத்துவமனைகளில் மிகவும் மோசமான காயங்களுடன் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் இரத்த காயங்களுடனும், மரண ஓலத்துடனும் மக்கள் பீதியில் உறைந்துப்போய் இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு அங்கு நிலமைகள் மோசமடைந்துள்ளதை அடுத்து, இதுதொடர்பாக விவாதிக்கவும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.