ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா குறித்த பிரேரணை, நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நாளைய தினமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விவாதத்தின் இடைநடுவே, சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமைவரை பிற்போடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
47 உறுப்பு நாடுகளை கொண்ட ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில், தமது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்துவதற்கு சிறிலங்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய விசேடமாக இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காத போதிலும், பெரும்பாலும் வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே, சிறிலங்கா தொடர்பிலான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.
சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை, குறித்த அறிக்கைக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் த இன்டர்நெஷனல் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் மூன்று ஆண்டு கால உறுப்புரிமைக்காக கடந்த ஜனவரி மாதம பாகிஸதான் மீள தெரிவானது.
சிறிலங்காதொடர்பில், இதற்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின்போது, அதற்கு எதிராக பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.