மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார்.
31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட செங்கலடி பிரதேச சபையில் ஏற்கனவே தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ந.கதிரவேல் பதவி வகித்தார்.
இந்நிலையில் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டமையினால் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் பிரகாரம் தவிசாளர் பதவி இழக்கப்பட்டது.
பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு, இன்று கிழக்கு மாகாண உள்ளுளூராட்சி ஆணையாளர் ந.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது திறந்தவெளி வாக்கெடுப்பிற்கு விடுமாறு கோரியிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சர்வானந்தனை, சந்திரவர்மன் முன்மொழிய அதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவானந்தன் வழி மொழிந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசுவை, மோகன்ராஜ் முன்மொழிய அதை உறுப்பினர் லோகிதராஜா வழிமொழிந்தார்.
வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போட்டியாளர் சர்வானந்தனுக்கு ஆதராவாக 17 உறுப்பினர்களின் வாக்குகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போட்டியாளர் திருநாவுக்கரசுக்கு ஆதரவாக 11 உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
தமிழர்விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஜனநாஜக தேசிய கட்சியின் உறுப்பினர் ஆகிய இருவரும் இதற்கு நடுநிலை வகித்தனர்.