ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்ஷேக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தமது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் அமைச்சர் நவீன் திசநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த ஜனாதிபதி தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள்.
எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச வேண்டும். ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும். ஐதேக இப்போது மிகவும் பலமாக உள்ளது. பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராகவே உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ராஜபக்ஷேவினர் மத்தியில் ஒற்றுமை இல்லை. குமார வெல்கம போன்ற சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள், கோட்டபாய ராஜபக்சவை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.
மூத்த அரசியல்வாதியான சமல் ராஜபக்ச, தான் புறக்கணிக்கப்பட்டால் அது அநீதியானது என உணரலாம். ஐதேகவிலும் சிறிய சிறிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் ஏனைய கட்சிகளை விட, ஒற்றுமையும், நல்லிணக்கமும் அதிகம் இருக்கிறது.
குறிப்பிட்ட குடும்பங்களுக்குள் ஐதேக சிக்கியிருக்கவில்லை. சஜித் பிரேமதாச மற்றும் என்னைப்போன்ற இரண்டாவது நிலைத் தலைவர்களை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உருவாக்கியிருக்கிறார்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.