வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தகவல் வெளியிட்ட அவர்,
“வட மாகாணத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், 85 வீதமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தடுப்பூசியைப் போடுவதற்காக ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.
பொது மக்களில் வயது அடிப்படையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் பெறப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தில் 118 நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நிலையங்களுக்கு பொதுமக்களை அழைத்துவரும் பணியை பொறுப்பேற்குமாறு பிரதேச சபை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.