யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
நினைவிடம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் யாழ்.மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்றையநாள் மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், அவ்விடத்திற்கு சிவில் உடையில் சென்றவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா எனவும், பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா என்றும் அவர்கள் அங்கிருந்த பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியதுடன், தாம் அந்த பணியில் ஈடுபடபோவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதனால் வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிகமாக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ்.மாநகரசபை முழுமையானப்படுத்தியுள்ளது.