வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
கடந்த காலத்தில் அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்தார்.
எனினும் குறித்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் காவல்துறையினர் ஊடாக அவரிடத்தில் விசாரிக்கப்பட்டது.
இதன்போதே குறித்த தாய் தான் பெற்ற குழந்தையை தான் வசிக்கும் காணியில் குழிதோண்டி புதைத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் குறித்த தாயை கைது செய்துள்ள காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.