பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியைக் குழப்பும் வகையில், சிங்களக் குண்டர்கள், வீதியில் ஆணிகளை வீசியும், வாகனங்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இன்று மூன்றாவது நாள் பேரணி, திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இடம்பெற்றபோதே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணி பயணித்து கொண்டிருந்த போது, வீதியில் ஆணிகள் வீசப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் சக்கரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களின் சக்கரங்களே சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, திருகோணமலை – மடத்தடி பகுதியில் பேரணியில் பங்கேற்ற சில வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆகியோர் பயணம் செய்த வாகனம், சிறிலங்கா காவல்துறையினரின் கண்ணுக்கு முன்பாகவே தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சிங்களக் குண்டர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களைக் கண்டதாகவும், சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.